மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் வரும் 9-ம் தேதி காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை பதிலுரை அளிக்கவிருந்தார். ஆனால், அமளி காரணமாக பிரதமரின் பேச்சு ரத்து செய்யப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முன்தினமும் மக்களவையை எதிர்க்கட்சியினர் முடக்கிய நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்கும் வரை அமளி தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று காலை மக்களவை கூடியவுடன் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியை தொடர்ந்த நிலையில், முதலில் பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் வரும் 9-ம் தேதி காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் அமளியை கண்டித்து பேசிய அவைத் தலைவர் ஓம் பிர்லா, பட்ஜெட் தொடரின் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்களின் பிரச்னையைப் பேசுவதற்காகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கங்களை எழுப்புவதற்கு அல்ல. அவையை சுமுகமாக நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.