விழுப்புரம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகின்றனர். இதனிடையே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். ஆனால், பா.ம.க. நிறுவனர் நான் தான். நான் எடுக்கும் முடிவே செல்லும். அன்புமணி கூட்டணி வைத்தது செல்லாது என்று ராமதாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று காலை பா.ம.க.வில் விருப்ப மனு வழங்கும் பணியை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அவருடைய மகளும், செயல் செயல் தலைவருமான காந்திமதி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதன்பின்னர், ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது,

பா.ம.க.வில் இரு அணிகள் கிடையாது. என் தலைமையிலான அணிதான் பா.ம.க. வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. பா.ம.க. செயல் தலைவர் காந்திமதி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்ட கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது என்று கூறினார். இதை வைத்து பார்க்கும்போது, ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைய விரும்புவதுபோல் தெரிகிறது.