தமிழக முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76, ஓட்டேரி, செல்லப்பா முதலி தெருவில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தொடக்க பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், ரூபாய் 4.58 கோடி மதிப்பீட்டில், 4,150 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளத்துடன் 15 வகுப்பறைகள், கணிப்பொறி ஆய்வகம், சமையலறை, சேமிப்பு கிடங்கு, கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட ஒப்பந்ததாரருக்கும், மாநகராட்சி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர், மேயர் தலைமையில், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74, கிருஷ்ணதாஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகள் மற்றும் 250 வாகன ஓட்டுநர்கள் உட்பட 650 பேருக்கு சமத்துவ பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர். கவுஷிக், மாமன்ற உறுப்பினர் எஸ். தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.