ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு வாக்கு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை விருப்ப மனு அளிக்க உள்ளேன். முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை. எப்போதும் விஜயுடன் தான் இருப்பேன். 2 நாட்களில் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
திண்டுக்கல் சீனிவாசன், விஜய் கருப்பு பணம் வாங்குவது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. அவர்கள் யாரிடம் அடிமையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். த.வெ.க.தனித்து போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.