காவிரி ஆற்றில் தமிழகத்தில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது. இந்நிலையில் மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் விவசாய சங்கத்தினர் நீர் திறக்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மைசூருவில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 230 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.