நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உலகநாயகன் என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீயே விடை என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி அவர் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தனது மனுவில் கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.