தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. அது இந்திய கலாச்சாரத்துடன் இணைந்தது என்று டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி வீட்டில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழத்தின் பாரம்பரிய முறைப்படி, பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பானையில் பால் ஊற்றி பிரதமர் மோடி வழிபட்டார். இதனையடுத்து, மாடுகளுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, உணவளித்த பிரதமர், கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த கொண்டாட்டத்தில், எல்.முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரும், பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்வில் அண்மையில் வெளியான பராசக்தி படத்தில் நடித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. அது இந்திய தேசத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம். உண்மையில் அது முழு மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம். ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக பொங்கல் போன்ற பண்டிகைகள் உள்ளன. பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினரும், தமிழ் கலாச்சாரத்தைப் போற்றுபவர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். இந்த சிறப்புமிக்க பண்டிகையை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவதை நான் ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இவ்விழாவில், நாட்டியம், இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.