ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரப் கைபந்து விளையாட்டு வீரர் யூஜி நிஷிடா, விளையாட்டு களத்தில் ஒரு பெண்ணிடம் காட்டிய அதீத மரியாதையும், அவர் மன்னிப்பு கேட்ட விதமும் தற்போது உலக அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கண்காட்சிப் போட்டியின் போது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக சர்வீஸ் அடிக்கும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதில் பங்கேற்ற யூஜி நிஷிடா, தனது முழு வலிமையையும் திரட்டிப் பந்தை அடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக, மிக வேகமாகச் சென்ற அந்தப் பந்து திசைமாறி அங்கிருந்த ஒரு பெண் நடுவரின் முதுகில் பலமாகத் தாக்கியது.
பந்து தாக்கியதைக் கண்ட நிஷிடா ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தார். அடுத்த கணமே, எவ்விதத் தயக்கமுமின்றி களத்தின் தரைப்பகுதியில் சறுக்கிக் கொண்டே அந்தப் பெண்மணியை நோக்கி ஓடினார். அவர் அருகில் சென்றதும் மண்டியிட்டு, மீண்டும் மீண்டும் தலைவணங்கி மன்னிப்பைக் கோரினார். அந்தப் பெண்மணியும் அவரது பெருந்தன்மையைக் கண்டு புன்னகையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கோருவது மிக உயர்ந்த குணம்" என இணையவாசிகள் நிஷிடாவைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்திக்குப் பிறகு தனது ஆட்டத்தைத் தொடர்ந்த நிஷிடா, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் இறுதியில் அவருக்குச் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராகத் தனது திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், களத்தில் ஒரு சிறந்த மனிதராகவும் யூஜி நிஷிடா பலரது இதயங்களை வென்றுள்ளார்.