மும்பை மாநகராட்சியின் 227 வார்டுகளில் பா.ஜ.க. 89 வார்டுகளில் வென்றது. இதன் கூட்டணி கட்சியான சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே) அணி 29 வார்டுகளில் வெற்றி பெற்றது. மும்பை மாநகராட்சியில் பெரும்பான்மையை நிருபிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணியில் தற்போது 118 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வால் மேயரை தனித்து தேர்வு செய்வதற்கு போதிய பலம் இல்லை. சிவ சேனாவுடன் இணைந்து தேர்வு செய்ய முடியும். இதனால் மேயர் பதவி யாருக்கு என்பவதில் ஆளும் கூட்டணிக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேயர் பதவியை முதல் இரண்டரை ஆண்டுகள் தனது கட்சியும் , அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தை பா.ஜ.க.வும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே விரும்புவதாக தெரிகிறது. இதனால் தனது கட்சியின் 29 வார்டு உறுப்பினர்களை யாரும் பேரம் பேசி இழுத்து விடக் கூடாது என்பதற்காக அவர்களை 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இதுகுறித்து முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், மகாயுதி கூட்டணி மேயர் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவித்தார்.