மத்திய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த பட்ஜெட்டின்போது பிகார் தேர்தல் நடைபெறவிருந்ததால் அந்த மாநிலத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
தமிழ்நாட்டிற்கு ரயில் சேவை உள்ளிட்ட ஒரு சில அறிவிப்புகள் இருந்தாலும் கேரளத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று அந்த மாநில எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளத்திற்கு எதிரான கேரள மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று கையில் பதாகைகளுடன் கோஷமிட்டனர். மத்திய பட்ஜெட்டில் மக்களின் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.