ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மீது அதிக வரியை விதித்து கடுமையாக நடந்து கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் வரியை உயர்த்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இது குறித்து அவர் கூறியதாவது:- அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்கள். நாம் இந்தியா மீதான வரியை மிக விரைவாக உயர்த்த முடியும். அது அவர்களுக்கு மோசமாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.