பழநி நில மோசடி வழக்கில் சார் பதிவாளர், இடைத்தரகரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பழநி மடம் நிலம் மோசடி வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடம் நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, இடத்தரகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் நிர்வாகி முருகதாஸ், இடைத்தரகர் ஜெயப் பரகாஷ் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் காவலில் செல்ல சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, இருவரையும் இன்று (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் செல்ல மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அனுமதியளித்தார்.
இதையடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பதற்காக தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.