சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.
அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.