தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.