ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்கிடையே, அண்மையில் அமைச்சர் அன்பில் மகேஸிடம், இதர மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
அதை தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் மதிப்பெண்ணை குறைக்க அரசு முன்வந்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் இருப்பதைப்போன்று பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும் (150-க்கு 75 மதிப்பெண்) எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (150-க்கு 60) என குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்தவரையில் டெட் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பணிநியமனத்துக்கு மற்றொரு போட்டித் தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.