முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் அண்ணா நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அண்ணா நினைவு நாளையொட்டி மெரீனாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன். தலைமுறைகள் தாண்டி, எல்லோரும் விரும்பி விளிக்கும் அண்ணா. தம்பி, மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்.

அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. அண்ணா உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அதிமுக இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் அண்ணாயிசம் போற்றும் அ.தி.மு.க. நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம். அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.