சண்டிகர் மாநகராட்சிக்கான தேர்தலில் பா.ஜ.க. கவுன்சிலர் சௌரப் ஜோஷி புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்முனைப் போட்டியில், பா.ஜ.க.வைச் சேர்ந்த சௌரப் ஜோஷி 18 வாக்குகளையும், ஆத் ஆத்மி கட்சி வேட்பாளர் யோகேஷ் திங்ரா 11 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் குருபிரீத் சிங் கபி 7 வாக்குகளையும் பெற்றனர். முன்னதாக நடைமுறையிலிருந்த, ரகசிய வாக்கெடுப்பு முறைக்குப் பதிலாக, கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் கைகளை உயர்த்திய பிறகு, வாய்மொழியாக தங்கள் முடிவை உறுதிப்படுத்தினர். நியமனக் கவுன்சிலரான ரம்னீக் சிங், தேர்தலுக்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சண்டிகர் மாநகராட்சியின் 35 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், பா.ஜ.க.வுக்கு 18 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 11 கவுன்சிலர்களும், காங்கிரஸுக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர். சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு, 35 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில் பதவி வழி உறுப்பினராக வாக்களிக்கும் உரிமையும் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி, தனது கட்சியின் வேட்பாளர் குர்பிரீத் சிங் கபிக்கு ஆதரவாகக் கையை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.