ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களது இந்த பயணத்தின்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதி செய்யப்பட்டது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், இந்தியாவுடன் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பா தனக்கு எதிரான போருக்கு தானே நிதி அளித்துக் கொள்கிறது. ரஷ்யாவுடனான நேரடி எரிசக்தி வர்த்தகத்தை ஐரோப்பா கணிசமாக குறைத்திருக்கலாம். ஆனால் இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்துள்ள நிலையிலும், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் போருக்கு மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.