தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ தங்கமணியின் கேள்விக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை. அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தன.

அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்து விட மாட்டார்கள். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினோம். அதனால்தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து எனக்கு இனிப்பு ஊட்டினார்கள். போராட்டங்கள் பல இடங்களில் நடந்துக் கொண்டிக்கிறது. போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் எதை நிறைவேற்ற முடியும் என சிந்தித்து, அந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.