2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரசின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. தி.மு.க.வைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துத் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,
எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். கருத்துரிமை இருப்பதால் பேசுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தமிழகத்தின் இண்டியா கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்தான். இவ்வாறு அவர் கூறினார்.