தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் பணி தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
மிரட்டினால் அடங்கி விடுவோம் என எண்ணியோர்க்கு, தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியாரும், வீரபாண்டிய கட்டபொம்மனும். இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம். கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு திருவுருவச்சிலை அமைத்தோம். தமிழ் நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.