ஈரோடு மக்கள் சந்திப்பின் போது தி.மு.க.வை தீயசக்தி என்றும், த.வெ.க.வை தூய சக்தி என்றும் விஜய் பேசியது பேசுபொருளானது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் நேற்று, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது,
நாங்கள் தீய சக்தி இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதி கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும்.
அவரைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்து விட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய்யால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். அவர், ஐநூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதே போல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்போல் நாங்கள் இல்லை. பா.ஜ.க.வின் சி டீம்தான் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.