அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பு ஏதுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமரின் ஆட்சி மலர வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் தேர்தலில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அம்பேத்கர் நினைவு தினத்தில் சபதம் ஏற்கிறோம். அயோத்தி இந்தியாவில் தான் இருக்கிறது. அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பு ஏதுமில்லை. ராமர் ஆட்சியின் பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமரின் ஆட்சி மலர வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். அங்கே பக்கத்தில் தர்கா இருக்கிறது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் நீதிபதி தீர்ப்பு என்ன சொல்லி இருக்கிறார் என்றால் அந்த தர்கா கிட்ட போகாமல் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தான் அனுமதி கொடுத்து இருக்கிறாங்க. இன்னும் சொல்ல போனால், தீர்ப்பிற்கு தர்காவினர் ஒருவர் கூட எதிர்ப்பு சொல்லவில்லை. கனிமொழி, துணை முதல்வருக்கு என்ன பாதகம் இருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஜனநாயகத்தை அழித்து விடுவோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு ஆரம்ப கட்ட வேளையில் அவர் ஈடுபடுகிறார் என்று நினைக்கிறேன். அவர்களுடைய கனவு பலிக்காது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கூட்டணிக்கு நாள் இருக்கிறது. 100 நாட்கள் இருக்கிறது. தி.மு.க. ஆட்சி காலம் 100 நாட்கள் எண்ணப்படுகிறது. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரும். நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.