டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்த வகையில் வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.

இந்த நிலையில், வரும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பசுமை மின் சக்தி என்ற தலைப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.