முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.

எதிரிகளும் துரோகிகளும் தீட்டும் திட்டங்கள் பலிக்காது. அ.தி.மு.க.வின் வெற்றியே நமது இலக்கு மக்கள் துணையோடு எம்.ஜி.ஆர் உருவாக்கிய உண்மை ஜனநாயகத்தை எந்நாளும் காப்போம். எம்.ஜி.ஆரின் புரட்சி வழியை பின்பற்றி மக்கள் தொண்டாற்ற, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் காட்டிய புரட்சி வழியை பின்பற்றுவோம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அயராது உழைப்போம். தி.மு.க. வாக்குறுதிகள் பற்றிய தமிழக மக்களின் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை. இவ்வாறு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.