இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அதிபர் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார். அதன் பின்னர், இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும் அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்தியா மீண்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கினால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டது. இதனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தவின் மூலம் இந்தியா மீது இருந்த வரி தற்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி ரத்து செய்யப்படுவதாகவும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா - அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இந்திய சந்தையில் 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு பயனளிக்கும். இந்தியாவில் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டால் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜவுளி, தோல் பொருள்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்திய மருந்துப் பொருள்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது.