அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பார்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அரசியலமைப்பை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் அவரை நினைவு கூர்ந்து டுவிட்டர் தளத்தில் பதிவை போட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பதிவில், ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் தினத்தில் அம்பேத்கரை நினைவுகூர்கிறோம். அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் மற்றும் நீதி, சமத்துவம், அரசியலமைப்பு மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நம்மை தேசிய பயணத்தில் தொடர்ந்து வழிநடத்துகின்றன. கண்ணியம் மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக திகழ்ந்து வருகிறார். சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான நடவடிக்கைளில், அவரது கருத்துக்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அடிப்படையாக கொண்டு, அவர் உருவாக்கிய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான எனது உறுதியை வலுப்படுத்துகிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான கூட்டுப் போராட்டத்தை இந்த நாள் ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.