காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேருக்கு நேற்று முன்தினம் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் கஜ, அஸ்வ, உஷ்ர பூஜைகளில் கலந்து கொண்டார். தங்கத்தேரினை சுற்றிப் பார்த்து அதன் கலைநயத்தை பாராட்டிய அவர், தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சாமிகள், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, அறக்கட்டளை நிர்வாகிகள் மகாலட்சுமி சுப்பிரமணியம், வலசை ஜெயராமன், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.