சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதல்வருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி. நாங்கள் எதிர்பார்த்தபடி ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார் முதல்வர். 48 ஆயிரம் பேருக்கு கருணை ஊதியம் அறிவித்திருப்பதை ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது. எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார். வரும் 6-ம் தேதி முதல் நடக்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.