மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வருகிற 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுவை திரும்ப பெற நேற்று முன்தினம் கடைசி நாளாகும். நேற்று சனிக் கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பிரதான கட்சி வேட்பாளர்கள், குறிப்பாக ஆளும் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டும் 66 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் கேசவ் உபாத்யே தெரிவித்தார். இதில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் 44 பேர் என்றும் அவர் கூறினார்.
அதிகபட்சமாக கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சியில் ஆளும் கட்சியினர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதே போல பன்வெல், பிவண்டி, ஜல்காவ், புனே, பிம்பிரி சிஞ்வாட், அகில்யாநகர், சத்ரபதி சம்பாஜிநகர், நாக்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் அதிகளவில் ஆளும் கட்சியினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக எதிர்க்கட்சியினர் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வேடபாளர்களின் வேட்பு மனுக்களை திரும்ப பெற வைக்க மற்ற வேட்பாளர்களுக்கு அழுத்தம், மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதே போல ஆசைவார்த்தைகள் கூறி வேட்பு மனுக்களை திரும்ப பெற வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.