நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விஜய் ஒரு நடிகராக சிறப்பாக பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். தவெகவில் விஜய்யின் தந்தையவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
த.வெ.க.வில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. தி.மு.க.வின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்து விட்டேன். நிலவு ஒருநாள் அமாவாசையாகும். நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும். அதுபோல அவரும் ஒரு நாள். எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.
மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும் என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். விஜய்யை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.