திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் வருவதால் வி.ஐ.பி. டிக்கெட் இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 நன்கொடை வழங்கினால் பக்தர்களுக்கு தரப்படும் வி.ஐ.பி. டிக்கெட் இன்று 27, 28, 29-ம் தேதிகளில் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இணையதளம் வழியாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. நன்கொடை வழங்கிய பின்னர் பக்தா்கள் ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். நன்கொடை வழங்குபவர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் ஸ்ரீவாணி ஆப்லைன் தரிசன டிக்கெட்டுகள் இன்று 27, நாளை 28, நாளை மறுநாள் 29 ஆகிய தேதிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருமலை ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரிலும், திருப்பதியில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.