திரிபுரா சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வா பந்து சென்(72), கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். பிஸ்வா பந்து சென்னுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வடக்கு திரிபுராவில் உள்ள தர்மநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
இந்நிலையில், பிஸ்வா பந்து சென் மறைவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சஹா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சபாநாயகர் பிஸ்வா பந்து சென் மறைவால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவரது மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.