இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது. இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர். நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.
இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் மோடியின் செய்தியையும் தெரிவித்தேன். ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.