வானுயர் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழகம் சாதனை படைத்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் அதிக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
வானுயர் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழகம் சாதனை படைத்துள்ளது. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை. இருந்தும் ஜி.எஸ்.டி.பி வளர்ச்சியில் 16 சதவீதத்துடன் தமிழகம் நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழகம்தான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி. 2021-2025ம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழகத்தின் பொருளாதாரம். மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி.
நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம், தமிழகத்துக்கே சொந்தம். தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழகத்தின் வெற்றி. 2031-ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன். இது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.