அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து நேற்று முன்தினம் சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் த.வெ.க மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க.வில் இணைந்ததையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜய் படங்களுடன் அவரது கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. தனது வாகனத்தில் த.வெ.க. கட்சி கொடியையும் மாற்றியுள்ளார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் அவரது சொந்த ஊரான ஈரோடு கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். செங்கோட்டையன் சென்ற விமானம், கோவையில் 1.40 மணிக்கு தரை இறங்க இருந்தது.
இந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தரை இறங்க முடியாமல் விமான நிலையத்தை விமானம் சுற்றி வந்தது. இதனையடுத்து விமானமானது பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விமானம் கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.