மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:-
முன்பெல்லாம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டி இருந்ததால், 3 முதல் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. பாஸ்டேக் வந்த பிறகு இந்த நேரம் 60 வினாடிகளை விட குறைந்தது. நமது வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரித்தது. தற்போது, எம்.எல்.எப்.எப். என்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையில் டிஜிட்டல் கட்டணம் வசூலிக்கும் முறை வரப்போகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இம்முறை அமலுக்கு வரும். இதன்மூலம் வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம் அங்கு நிறுத்த வேண்டியது இல்லை. வாகன நம்பர் பிளேட்டுகள், ஏ.ஐ.யுடன் செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காணப்பட்டு, பாஸ்டேக் மூலமாக கட்டணம் வசூலிக்கப்படும். அந்த திட்டம் வந்த பிறகு எரிபொருளில் ரூ.1,500 கோடி சேமிக்கப்படும். அரசின் வருவாய் ரூ.6 ஆயிரம் கோடி அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.