திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இதில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறும். சந்தனக்கூடு விழாவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி நடைபெறும். ஏற்கனவே, அசைவ கந்தூரி விழா நடத்த தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சந்தனக்கூடு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கந்தூரி நடத்த தடை விதிக்க கோரி ஐகோர்ட் கிளையில் மாணிக்க மூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கந்தூரி நடத்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஆனால் அதை கருத்து கொள்ளாமல் இந்த வருடமும் சந்தனக்கூடு என்ற பெயரில் கொடியேற்றி, விழாவை தொடங்கியுள்ளனர். எனவே கந்தூரி நடத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தர்கா தரப்பில் யார் ஆஜராகினர் என கேட்டனர். அப்போது மனு தாரர் தரப்பில் இந்த வழக்கு இன்று(நேற்று) தான் விசாரணைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இடைக்கால உத்தரவுக்கு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும் தர்கா தரப்பில் மனுதாரர் தரப்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விழாவில் எந்த இடைக்கால தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.