ஒடிசா மாநில அரசின் தலைமை செயலாளராக முதன்முறையாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஒடிசா மாநில அரசின் தலைமை செயலாளராக உள்ள மனோஜ் அஹூஜா வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தலைமைசெயலாளராக 1991-ம் ஆண்டை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனு கார்க் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவரான அனு கார்க் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் தற்போது வளர்ச்சி ஆணையர் ,கூடுதல் தலைமை செயலாளர், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாநிலத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்கும்முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதற்கு முன்னதாகவே , தலைமை செயலாளருக்கு அடுத்த படியாக கருதப்படும் வளர்ச்சி ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கார்க்கின் இந்த பதவி உயர்வு, ஒடிசாவின் நிர்வாக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.