நாட்டில் உள்ள 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் சார்' எனும் வாக்காளர்
பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தான் எஸ்.ஐ.ஆர். பணி 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை தனது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடந்து வருகிறது.
வாக்காளர்களாக இருப்போர் அதற்கான படிவங்களை வாங்கி முறையாக பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். அப்போது தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும்.
இல்லாவிட்டால் ஓட்டுரிமை என்பது இருக்காது. பீகாரை தொடர்ந்து தற்போது 9
மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4-ம் தேதி இந்த பணி தொடங்கியது.
சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகள்,
லட்சத்தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த பணி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் 51 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை சரிபார்க்கும் பணியில் பி.எல்.ஓ எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தான் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் 37 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மகனை குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கோபாரண்டா
கிராமத்தை சேர்ந்தவர் சக்கபோர்த்தி. இவரது மூத்த மகன் பெயர் விவேக். இவர் கடந்த1988-ம் ஆண்டில் திடீரென்று மாயமானார். குடும்பத்தில் சண்டையிட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விவேக்கை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் மனவருத்தம் அடைந்தனர். அதன்பிறகு காலப்போக்கில் படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்தனர். தற்போது விவேக்,
கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர நடவடிக்கையில் தனது பெயரை சேர்க்க விவேக்கின் மகன் தனது ஏரியாவின் பி.எல்.ஓ பிரதீப் என்பவரை செல்போன்
எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் விவேக்கின் மகன் தனது தந்தை
குடும்பத்தை விட்டு பிரிந்து வந்ததையும், தற்போது தன்னிடம் அவர்கள் பற்றிய எந்த
விவரமும் இல்லாததையும் கூறினார். இருவரும் நீண்டநேரம் பேசினர். அப்போது தான் பிரதீப்பிற்கு ஒரு விஷயம் தெரிந்தது.
அதாவது தனது அண்ணன் பெயரும் விவேக் தான் என்றும், அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டதாக குடும்பத்தினர் கூறியதும் நினைவுக்கு வந்தது.
இதையடுத்து உடனடியாக பிரதீப், விவேக்கை நேரில் பார்க்க அழைத்தார். இருவரும்
சந்தித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் அண்ணன் - தம்பி என்பதை புரிந்து
கொண்டனர். பிறகு பிரதீப் தனது அண்ணன் விவேக்கை வீட்டுக்கு அழைத்து சென்றார். 37 ஆண்டுகளுக்கு பிறகு விவேக் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார்.
இதுபற்றி விவேக் கூறுகையி்ல், எனக்கான மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க
முடியவில்லை. கடந்த 37 ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது குடும்பத்துடன்
சேர்ந்துள்ளேன். நான் எனது வீட்டுக்கு திரும்பி உள்ளது. நான் அனைவரிடமும் பேசி
விட்டேன். மகிழ்ச்சியாக
இருக்கிறேன். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை கொண்டு வந்த இந்திய தேர்தல்
ஆணையத்துக்கு நன்றி. எஸ்.ஐ.ஆர். பணி வராவிட்டால் நான் எனது குடும்பத்தை சந்தித்து இருக்க மாட்டேன் என்றார்.