எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிடட்ர் தள பதிவில், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.