அ.ம.மு.க. பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை அமித்ஷா தான் இயக்குகிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அ.ம.மு.க. அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை. அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு. செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அவரது நிலைப்பாட்டை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நான் நட்புடன் நெருங்கி பழகியவர்களில் அவரும் ஒருவர். அவரது முடிவை பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரை பற்றி விமர்சிப்பது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையை குறைப்பதாக இருக்கும். மத்திய அமைச்சர் அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது. அதை ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியாக ஏற்றோம். தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றார்.