உத்தரகாண்ட்டில் உள்ள அல்மோராவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட்மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசெய்ன்- விநாயக் சாலையில் நேற்று காலை சுமார் 18 பயணிகளுடன் பேருந்து சென்றது. அந்த பேருந்து ராம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஷிலாபானி அருகே திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இது தொடர்பான தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட தகவலின்படி 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைகாக கொண்டு சென்றுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரா பிஞ்சா கூறினார்.

இந்த துயர சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியசைனில் இருந்து ராம்நகருக்குச் செல்லும் வழியில் பிக்கியசைன்-விநாயக் மோட்டார் சாலையில் நடந்த ஒரு பேருந்து விபத்து குறித்து மிகவும் துயரமான செய்தி எனக்குக் கிடைத்தது, இதனால் பயணிகள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் இதயத்தை உடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.