வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரையில் அழகர்கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவையாக உள்ளன. இந்த கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20-ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று 30-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது வழித்துணைப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளியில் வருவார். இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயில் வழியே மூன்றாம் பிரகாரத்துக்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து, மணல்வெளி, நடைபந்தல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு ஒரு மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பின்னர் சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருவார்.
விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ஸ்ரீரங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில், பட்டர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இதே போல் தமிழகம் முழுவதும் பெருமாள் வீற்றிருக்கும் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெறுகிறது.