காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ, போட்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் நேற்று தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இரண்டு சங்கங்களும் வரும் 6-ம் தேதி முதல், மாநிலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. கடந்த 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டோ - ஜியோ நிர்வாகிகளுடம் பேச்சு வார்த்தை நடந்தது. அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது,
எங்களது கோரிக்கைகளை அமைச்சர்களிடம் வைத்தோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அறிவிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.