ஆஸ்திரேலியா மண்ணில் இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம். நாடு முழுவதும் துப்பாக்கியை திரும்ப பெறும் பணி தொடங்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில், கடந்த 14-ம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகையின்போது பொதுமக்கள் மீது இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்திரேலியாவில் அதிக துப்பாக்கிகள் உள்ளன. இதைத் தொடர நாம் அனுமதிக்க முடியாது. குடியுரிமை இல்லாதவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும், சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு ஆறு துப்பாக்கிகள் வைத்திருக்கவும் தேவையில்லை.
கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவருக்கு அப்படித்தான் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்த விட மாட்டோம் துப்பாக்கியை திரும்ப பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்காகப் பணியாற்றும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் நன்றி. எங்கள் ஆஸ்திரேலிய போலீசார், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறியவும், ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.