ஆஸ்திரியா நாட்டின் ஆல்ப்ஸ் மலை பகுதிகளில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டுகளில் வீரர்கள் ஈடுபடுவது வழக்கம். எனினும், சமீப நாட்களாக இந்த பகுதியில் அடிக்கடி கடும் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், வீரர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டைரியா மாகாணத்தில் முர்தல் மாவட்டத்தில் செக் நாட்டின் 7 பேர் அடங்கிய சுற்றுலா குழுவினர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் சிக்கி கொண்டனர். இது பற்றி போலீசார் கூறும்போது, அவசரகால மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், 3 பேர் பலியாகி விட்டனர் என்றார்.
இதே போன்று, சால்ஸ்பர்க் அருகே பொங்காவ் நகரில் கடந்த சனிக்கிழமை மற்றொரு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பின்னர் உயிரிழந்தனர். இதே பகுதியில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி பனிச்சறுக்கு வீரர் ஒருவர் பலியானார்.
இதுதொடர்பாக பொங்காவ் மலைப்பிரதேச மீட்பு குழுவின் மாவட்ட தலைவர் ஜெரார்டு கிரெம்சர் கூறும் போது, எண்ணற்ற பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறோம். இந்த நிலையில் மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டு, துரதிர்ஷ்டவசத்தில் பலர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார்.