ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம், ரசோல் அருகே உள்ள இருசுமண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட பெரும் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. இருசுமண்டா கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கிணற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் இருந்து கச்சா எண்ணெய் கலந்த இயற்கை எரிவாயு மிக பலத்த சத்தத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறியது.

வெளியேறிய எரிவாயு அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பற்றிக் கொண்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, பனிமூட்டம் போலக் காட்சியளித்தது. இந்தத் தீ விபத்தில் அருகில் இருந்த சுமார் 500 தென்னை மரங்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் உடனடியாகக் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த விபத்து குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில்,. இருசுமண்டா கிராமத்தில் 2-வது நாளாக ஓஎன்.ஜி.சி குழாய் கிணறு மளமளவென எரிந்து வருகிறது. இருசுமண்டா கிராமத்தில் எரிவாயு கசிவால் தீப்பிடித்த நிலையில் தீயை தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கவும், எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தவும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன. எரிவாயு குழாய் கிணறு விபத்து நேரிட்ட பகுதியில் 600 மீட்ட தொலைவுக்கு வீடுகள் இல்லாததால் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.