மூன்று முறை வீடு தேடி சென்றும், கணக்கெடுப்பு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், டிசம்பர், 9 முதல் 2026 ஜனவரி 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எஸ்.ஐ.ஆர். எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை வெற்றிகரமாக முடிக்க, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 7,234 ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை, 6.23 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட தேர்தல் அலுவலர்களால், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், படிவங்களை பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, டிசம்பர் 4-ம் தேதி வரை காத்திருக்காமல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைத்த, அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், டிசம்பர் 9-ல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட, 12 அரசியல் கட்சிகளின் 2.44 லட்சம் ஓட்டுச்சாவடி ஏஜன்ட்களும், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினமும், 50 கணக்கெடுப்பு படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., நடைமுறையில், வாக்காளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், தனது பெயர் அல்லது உறவினர் பெயரை கண்டறிய முடியாதவர்கள், மற்ற விபரங்களை பூர்த்தி செய்து, கணக்கெடுப்பு படிவத்தை, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைத்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறும் டிசம்பர் 4-க்குள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதுமூன்று முறை வீடு தேடிச் சென்றும், கணக்கெடுப்பு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது
பட்டியலில் இடம் பெறாதவர்கள், தங்கள் பெயரை சேர்ப்பதற்காக, டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். ஒருவர் பெயரை சேர்க்க, எதிர்ப்பு தெரிவிப்போரும் அந்த காலத்தில் தெரிவிக்கலாம் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை இணைத்து, அவரது பெயரை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஜனவரி 31-ம் தேதி வரை, வாக்காளரின் தகுதி ஆய்வு செய்யப்படும்
வாக்காளரின் அனைத்து உரிமை கோரல் மற்றும் மறுப்புரை பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், 2026 பிப்ரவரி 7ல் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதற்கிடையே, கணக் கெடுப்பு படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள், 70.7 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.