வட இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மாதங்கள் ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன.
டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் செல்கின்றன. மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.